நளினி வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: சட்டவிரோத காவலில் இருக்கும் தன்னை விடுவிக்கக் கோரி, ராஜீவ் கொலையாளி நளினி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 11) தீர்ப்பளிக்கிறது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழக அமைச்சரவை, கடந்த 2018ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரை மீது கவர்னர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இதுவரை தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நளினி தரப்பு மற்றும் மத்திய அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்புக்கும் அறிவுறுத்தி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.



