மாநிலம்

புதிய பொது செயலாளர் தேர்வு செய்ய வருகிற 29ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது

சென்னை: புதிய பொது செயலாளர் தேர்வு செய்ய வருகிற 29ம் தேதி திமுக பொதுக்குழு கூடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன்(98) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கீழ்ப்பாக்கத்தில் ஆஸ்பிரியன் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் கடந்த ஓராண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அன்பழகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கடந்த மாதம் 24ம் தேதி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 7ம் தேதி அன்பழகன் காலமானார். கலைஞரின் உற்ற நண்பராக இருந்து வந்த அன்பழகன் மறைவு திமுகவினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மறைந்த அன்பழகன் கடந்த 1977ம் ஆண்டு முதல் திமுக பொது செயலாளராக இருந்து வந்தார். சுமார் 43 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில் திமுகவின் புதிய பொது செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு கூட்டம் வருகிற 29ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக பொதுக்குழுக் கூட்டம் வருகிற 29ம் தேதி(ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் எனது தலைமையில் நடைபெறும். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுச்செயலாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

29ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் புதிய பொது செயலாளரை தேர்ந்தெடுப்பார்கள். 1949ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா, திமுகவை தொடங்கினார். கட்சி தொடங்கியதும் அவர்தான் முதல் முறையாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார். பின்னர் மீண்டும் அண்ணா பொதுச் செயலாளராக இருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு 1969ம் ஆண்டு தற்காலிக பொதுச் செயலாளராக நெடுஞ்செழியன் தேர்வானார். அவரைத் தொடர்ந்து 1977ல் கட்சிக்குள் தேர்தல் நடைபெற்றது. அதில் பேராசிரியர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். 43 ஆண்டுகள் அன்பழகன் பொதுச் செயலாளராக இருந்தார். தற்போது 6வது பொதுச் செயலாளர் தேர்வு நடைபெறுகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button