இரங்கல் செய்தி

பதினைந்து வருடம் தென் சென்னை மாவட்ட செயலாளராகவும், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய திரு ஜே. அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். திராவிட இயக்கத்தின் தொடக்க கால தளகர்த்தராக விளங்கிய தியாகராய நகர் பழக்கடை ஜெயராமன் அவர்களின் மகனான ஜெ. அன்பழகன் போர்க்குணம் மிக்க செயல்வீரராக விளங்கி வந்தவர். மனதில் பட்டதை துணிச்சலாக கூறக்கூடியவர்.
தி.மு.க. தலைமையின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டு வந்தவர். சோதனையான காலத்தில் உறுதியாக இருந்தவர்.
தி.மு.க. தலைமை இவரிடம் எத்தகைய பொறுப்பு வழங்கினாலும், குறிப்பாக பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்துவதில் இவருக்கு நிகர் எவருமில்லை. இவரது இறுதி காலத்தில் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வாரி வழங்கியவர். இவரது இறப்பு மிகுந்த வேதனையை தருகிறது.
திரு ஜே. அன்பழகன் அவர்கள் மறைவால் வாடும் தி.மு.க. தலைவர் தளபதி திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும், குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
- திரு. கே.எஸ். அழகிரி



