பீதிக்கு நோ சொல்லுங்கள், முன்னெச்சரிக்கைக்கு எஸ் சொல்லுங்கள் – பிரதமர் மோடி டுவிட்

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கியது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 117 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. இதுவரை 4,635 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா வைரஸ் பரவி வருவதால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை. முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதுபோல் மத்திய மந்திரிகள் யாரும் வெளிநாடு செல்ல வேண்டாம்.
மக்களும் அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்கவும். பெருமளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா பரவலை தடுப்பதன் மூலம் அனைவரது பாதுகாப்பையும் நாம் உறுதி செய்ய முடியும் என பதிவிட்டுள்ளார்.



