போலி டாக்டர் சிறையிலடைப்பு

தஞ்சை: தஞ்சை அருகே 20 ஆண்டுகளாக ஆஸ்பத்திரி நடத்தி மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் சிறையிலடைக்கப்பட்டார். தஞ்சை அருகே மெலட்டூர் மெயின் ரோட்டில் வைரம் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்தவர் சுந்தரம்(48). கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்தார். இந்நிலையில் இவர், மருத்துவம் படிக்காமல் போலியாக மருத்துவமனை வைத்து நடத்துவதாக தஞ்சை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனருக்கு புகார் வந்தது. இதையடுத்து நேற்று மதியம் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ராணி தலைமையில் கும்பகோணம் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆணையர் சுதர்சன் மற்றும் சுகாதார பணிகள் துறை அலுவலர்கள் மருத்துவமனையில் சோதனை நடத்தினர்.
இதில் சுந்தரத்திடம் மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ் எதுவும் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மெலட்டூர் போலீசில் சுந்தரம் ஒப்படைக்கப்பட்டார். இணை இயக்குனர் ராணி அளித்த புகாரின்பேரில் போலி டாக்டர் சுந்தரம் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை 3வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்பேரில் திருச்சி மத்திய சிறையிலடைத்தனர்.