மலையை தூக்க நான் ரெடி.. அதை தூக்கி என் கையில் வைங்க

இப்பவும் சொல்றேன்.. மலையை தூக்க நான் ரெடி.. அதை தூக்கி என் கையில் வைங்க.. காமெடியான ரஜினி பிரஸ்மீட்
சென்னை: எழுச்சி வந்தவுடன்தான் அரசியல் பிரவேசம் என ரஜினி கூறியது மலையை தூக்க நான் ரெடி, தூக்கி என் கையில் வைங்க என செந்தில் காமெடி போல் இருப்பதாக சமூகவலைதளங்களில் ஓட்ட ஆரம்பித்துவிட்டனர். ரஜினிகாந்த் இன்று அரசியல் பிரவேசத்தை அறிவித்து விடுவார் என ரசிகர்கள் அனைவரும் நம்பியிருந்தனர். வழக்கம் போல் குழப்பமான பேச்சின் மூலம் ஏமாற்றத்தை அளித்துவிட்டார் ரஜினி. சென்னை ஹோட்டலில் அவர் பேசுகையில் நான் எதற்காக அரசியல் வருகிறேன் தெரியுமா?
ஆட்சி மாற்றம் உண்மையான ஜனநாயகம் அமைய வேண்டும் என்பதுதான் எனது கனவு, இதை நிறைவேற்றவே அரசியலுக்கு வருகிறேன். பெயருக்காகவோ, புகழுக்காகவோ, பணத்துக்காகவோ பதவிக்காகவோ நான் அரசியலுக்கு வரவில்லை. ஊழல் இல்லாத வளமான தமிழகத்தை உருவாக்க விரும்பும் தமிழக மக்கள் எனது நல்ல நோக்கத்தை சரியாக புரிந்து கொண்டு நான் விரும்பும் அரசியல் மாற்றத்திற்கும் ஆட்சி மாற்றத்திற்கும் ஆதரவு அளிக்க வேண்டும்.
ரஜினி கஷ்டப்படாமல் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.. எனவே மக்கள் எழுச்சி வந்தால்தான் அரசியல் பிரவேசம் என ரஜினி கூறியதன் மூலம் அவர் அரசியலுக்கு இப்போது வரப் போவதில்லை என்பதை சூசகமாக தெரிவித்துவிட்டார் என்றே கருதப்படுகிறது. அதாவது கஷ்டப்படாமல் எந்த பலனும் கிடைக்காது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ரஜினியோ கஷ்டப்படாமல் பலன் கிடைக்க வேண்டும் என்கிறார்
ஊடகங்கள் இது எப்படி சாத்தியமாகும். மக்களை சந்திக்க மாட்டேன். மக்களுடன் மக்களாக எந்த போராட்டத்தையும் முன்னெடுக்க மாட்டேன். எந்த புரட்சியையும் செய்ய மாட்டேன். குறைந்தபட்சம் தனது அரசியல் திட்டத்தை கூட மக்களிடம் நானே நேராக சென்று புரிய வைக்க மாட்டேன். ஆனால் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஓட்டு மட்டும் போட்டுவிட வேண்டும் என கூறுவதை போல் உள்ளது. அதுவும் மக்களிடம் இவரது அரசியல் மாற்றத்தை புரட்சியை கொண்டு செல்ல மக்கள் மன்றத்தினரும் ஊடகங்களும் போய் சொல்ல வேண்டுமாம்.
மலை தூக்கி வைப்பது அதாவது நோகாமல் நோன்பு கும்பிடுவது. இதை செந்தில் காமெடியுடன் சிலர் ஒப்பிடுகின்றனர். ஒரு படத்தில் சுந்தரராஜன் தனது பெண்ணை திருமணம் செய்து கொள்ள புத்திசாலியாக இருக்க வேண்டும் என செந்திலிடம் தெரிவிப்பார். அதற்கு செந்திலும் தான் மலையை தூக்க போவதாக ஊர் மக்களிடம் அறிவித்து மக்களை ஒன்று திரட்டுவார். அப்போது ஆஞ்சநேயர் வழிபாடு நடத்திவிட்டு இரு கைகளையும் மேலே உயர்த்திவிட்டு எல்லாரும் மலையை தூக்கி வைங்க நான் தூக்குறேன் என்பார் அது போல் இருக்கிறது ரஜினியின் பேச்சு.



