மக்களுக்கு எது தேவையோ அதையே சட்டம் ஆக்க வேண்டும்: சிஏஏ குறித்து விஜய் பேச்சு

சென்னை: சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடைக்கக் கூடாது. மக்களுக்கு எது தேவையோ அதையே சட்டம் ஆக்க வேண்டும் என சிஏஏ குறித்து மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மறைமுகமாக பேசினார்.
சென்னையில் நடந்த ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் பேசியதாவது: வாழக்கை நதி மாதிரி; நம்மை வணங்குவார்கள், வரவேற்பார்கள், கற்களையும் எறிவார்கள். என்ன நடந்தாலும் கடமையை செய்து கொண்டே போய் கொண்டிருக்க வேண்டும். இளைய தளபதியாக இருந்த போது, ‘ரெய்டு’ இல்லாமல் வாழ்க்கை அமைதியாக இருந்தது. உண்மையாக இருக்க வேண்டும் என்றால் சில நேரம் ஊமையாக இருக்க வேண்டும்.
மக்களுக்கு எது தேவையோ அதையே சட்டம் ஆக்க வேண்டும். சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடைக்கக் கூடாது. கொரோனா அச்சுறுத்தலால் ரசிகர்களின் வருகை தவிர்க்கப்பட்டதில் எனக்கு மிகுந்த வருத்தம். ரசிகர்கள் தவிர்க்கப்பட்டதை அரைமனதோடுதான் ஒப்புக் கொண்டேன். விஜய் சேதுபதி எனக்கு பெயரில் மட்டுமல்லாமல் மனதிலும் இடம் கொடுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ், மாநகரம் படம் மூலமாக திரும்பி பார்க்க வைத்தார். கைதி படத்தை திரும்பி திரும்பி பார்க்க வைத்தார். மாஸ்டர் படத்தில் என்ன பண்ண போறார் என நானும் காத்திட்டிருக்கேன். நண்பர் அஜித் ஸ்டைலில் வரலாம் என தான் இன்று, கோட் போட்டு வந்திருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
குடியுரிமை சட்ட திருத்தம்(சிஏஏ) குறித்து விஜய் மறைமுகமாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.



