ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளை ஆட்டிப்படைக்கும் கொரோனா

நியூயார்க்: பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்., தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல இடங்களைச் சமீபத்தில் பறிகொடுத்துவிட்டது. அதே நேரத்தில் ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில், அந்த இயக்கத்தினர் இன்னும் வேரூன்றி உள்ளனர்.இந்நிலையில், ஒரு செய்தி நிறுவனம், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் சமீபத்திய செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில் தெரிவித்துள்ளதாவது:
எந்த ஒரு நோயும் தானாக மண்ணில் வந்துவிடாது. கடவுள் யாரை தண்டிக்க விரும்புகிறாரோ அவர்களையே நோய் தாக்கும். நம்பிக்கை வைக்கும் அதே வேளையில், தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
கொரோனாவால் பெரும் பாதிப்புக்கு உள்ளான ஐரோப்பாவுக்கு நம் அமைப்பைச் சேர்ந்த யாரும் செல்லக் கூடாது. நம் அமைப்பைச் சேர்ந்தவர்களில் யாருக்காவது கொரோனா இருப்பது உறுதியாகியிருந்தால், அவர்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.
யாரெல்லாம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார்களோ, அவர்கள் ஐரோப்பாவுக்குச் செல்ல வேண்டாம். யாருக்கெல்லாம் நோய் தொற்று உள்ளதோ, அவர்கள் ஐரோப்பிவிலிருந்து வேறு எங்கும் போகக் கூடாது. கொட்டாவிவிடும்போது தும்மலின் போதும் வாயை மூட வேண்டும். கைகளையும் அடிக்கடி கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்களைக் காட்டி, உலக மக்களை அச்சுறுத்திய பயங்கரவாதிகள், கொரோனாவைக் கண்டு அஞ்சி நடுங்குவது நெட்டிசன்களை அதிகப்படியாக விமர்சிக்கச் செய்துள்ளது. அதில் சிலர், ‘கொரோனாவால் பாதித்த பயங்கரவாதிகளுக்கு மருத்துவச் சிகிச்சை கிடைக்க வாய்ப்பில்லை. இதனால், அவர்கள் விரைவில் அழிய நேரிடும்’ என, கருத்து தெரிவித்து வருகின்றனர்.



